Last Updated : 24 Dec, 2020 01:24 PM

 

Published : 24 Dec 2020 01:24 PM
Last Updated : 24 Dec 2020 01:24 PM

டிச 27-ல் தேசியத் திறனாய்வுத் தேர்வு: கோவையில் 6,915 மாணவர்கள் எழுதுகின்றனர்

தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வு டிச.27 ஆம் தேதி நடைபெறும் நிலையில், இத்தேர்வைக் கோவையில் 6,915 மாணவர்கள் எழுதுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.1,250-ம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. பிஎச்.டி. படிப்பில் சேர்ந்தால் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு உட்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி 2020-21ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும், டிச.27-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

’’தேசிய திறனாய்வுத் தேர்வு கோவை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களில் நடைபெறுகிறது. கோவை கல்வி மாவட்டத்தில் 23 மையங்களிலும், பேரூர் கல்வி மாவட்டத்தில் 16 மையங்களிலும், எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்தில் 23 மையங்களிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10 மையங்களிலும் என மொத்தம் 72 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 6,915 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

இத்தேர்வு 2 தாள்களைக் கொண்டது. மொத்தம் 100 மதிப்பெண்கள். காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் முதல் தாள் தேர்வானது மாணவர்களின் சிந்தனைத் திறனைப் பரிசோதிப்பதாக அமையும்.

பின்னர் 30 நிமிடங்கள் இடைவேளை அளிக்கப்பட்டு, 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை 2-ம் தாளுக்குத் தேர்வு நடைபெறும். இது மாணவர்களின் அறிவைப் பரிசோதிக்கும் வகையில் அமையும். மாணவர்கள் ஓஎம்ஆர் தாளில் கருப்பு நிறப் பேனா கொண்டு விடையளிக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 32 மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் 40 மதிப்பெண்களும் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்’’.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x