Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடப்பாண்டு முதல் மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வில் உள் ஒதுக்கீட்டின் மூலம் 399 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 7 மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
இப்பள்ளியில் படித்த மாணவி பத்மபிரியா சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். மாணவி அப்ரின் சிபாயா ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், மாணவி கோவர்த்தினி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியிலும் படிப்பதற்கு ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனர்.
அதேபோல், மாணவி பிரேமா வேலூர் மருத்துவக் கல்லூரியிலும், பவதாரணி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். மேலும், மாணவிவிஷ்ணுப்பிரியா வண்டலூர் அருகில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரியிலும், மாணவி கீர்த்தனா உத்தண்டியில் உள்ள ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியிலும் பயில ஆணை பெற்றுள்ளனர். இந்த மாணவிகளுக்கு அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT