Last Updated : 09 Oct, 2020 02:21 PM

 

Published : 09 Oct 2020 02:21 PM
Last Updated : 09 Oct 2020 02:21 PM

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசத்தின் பெருமிதம்: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசத்தின் பெருமிதம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாவட்டத்தில் இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ராஜஸ்தானில் ஒரு பள்ளி மற்றும் ஹரியாணாவில் ஃபரிதாபாத் மாவட்டத்தில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகியவற்றின் கட்டிடங்களுக்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மெய்நிகர் முறையில் நான்கு கட்டிடங்களையும் ஒரே நேரத்தில் அமைச்சர் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஃபரிதாபாத் அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் பொக்ரியால், ''கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசத்தின் பெருமிதம். இந்தப் பள்ளிகள் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் நன்னெறிகளையும் வழங்குகின்றன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கத் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2003-04 ஆம் ஆண்டில் இருந்து கேந்திரிய வித்யாலயா பள்ளி வேண்டும் என்று கேட்ட ஃபரிதாபாத் மக்களுக்காக, பள்ளிக் கட்டிடம் அர்ப்பணிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் 1,240 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டில், கே.வி. பள்ளிகளில் இருந்த 1 லட்சம் இடங்களுக்கு, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x