Last Updated : 18 Sep, 2020 12:14 PM

 

Published : 18 Sep 2020 12:14 PM
Last Updated : 18 Sep 2020 12:14 PM

புத்தகத்தைப் பார்த்து இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம்: முதல் முறையாகப் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனுமதி

கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தங்களின் இறுதிப் பருவத் தேர்வில் புத்தகங்களைப் பார்த்து ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விடையளிக்கலாம் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முதல் முறையாக அறிவித்துள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடக்கிறது. தேர்வுகளைக் கணினி மூலம் ஆன்லைனிலும், தேர்வு மையங்களுக்கு வந்து ஆஃப்லைனிலும் எழுதலாம்.

இந்நிலையில் இது தொடர்பாக பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் லாசர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ஆஃப்லைனிலும், ஆன்லைனிலும் நடத்தப்படும். மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் முறையில் தேர்வு எழுதலாம். மாணவர்கள் ஐந்து பாடங்களுக்குத் தேர்வு எழுதினால் சில பாடங்களை ஆஃப்லைனிலும், சில பாடங்களை ஆன்லைனிலும் கலந்து எழுதலாம்.

பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்படி இறுதி செமஸ்டர் தேர்வின்போது புத்தகம், குறிப்பேடுடன் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதலாம். திறந்த புத்தகத் தேர்வு முறையில் தேர்வு எழுத மாணவர்கள் தேர்வு அறைக்குப் புத்தகங்கள், குறிப்புகள், பிற ஆய்வுப் பொருட்களை எடு்த்து வரலாம். கரோனாவால் மாணவர்களிடம் உள்ள குறிப்புப் பொருட்களை யாரும் பரிமாறாமல் இருப்பதை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வார்கள். தேர்வுகளின் காலம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பழைய முறைப்படி தொடரும்.

மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை ஏ4 வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு பதில் தரவேண்டும். பிறகு அத்தாள்களை ஸ்கேன் செய்து தேர்வு முடிந்து 30 நிமிடங்களுக்குள் அனைத்துப் பக்கங்களையும் பிடிஎஃப் கோப்பாக மாற்றி அனுப்ப வேண்டும். மாணவர்கள் தங்கள் பதிவு எண், பொருள், பாடநெறி, தேதி மற்றும் முழு கையொப்பத்தை முதல் பக்கத்தில் எழுத வேண்டும்''.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீந்த் சிங் தனது சமூக வலைதளப் பதிவில், "மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத உள்ள பாடங்களை எவ்வாறு (ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில்) எழுத உள்ளார்கள் என்பதைக் கல்லூரி நிர்வாகத்தில் தெரிவிக்கலாம். எம்முறையில் தேர்வு எழுத வேண்டும் எனக் கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றிப் பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, திறந்த புத்தகத் தேர்வு முறை முதல் முறையாக மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x