Published : 05 Sep 2020 07:46 AM
Last Updated : 05 Sep 2020 07:46 AM

அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி அளித்த விவகாரம் அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டம்

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரியர் பாடத் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனால், நீண்டகாலமாக அரியர் வைத்திருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கூறும்போது, ‘‘அரியர் பாடங்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என்பதை ஏற்க முடியாது. மாணவர்களுக்கு தேர்வு நடத்தி பின்னரே பட்டம் வழங்க வேண்டும் என்று மின்னஞ்சல் மூலம் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது’’ என்றார்.

அதேநேரம் இந்த தகவலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

அரியர் தேர்வு தேர்ச்சி தொடர்பாக ஏஐசிடிஇ-யிடம் இருந்து எந்த மின்னஞ்சலும் வரவில்லை. அவ்வாறு மின்னஞ்சல் எதுவும்வந்திருந்தால் அதை துணைவேந்தர் சுரப்பா பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

அரசு எடுத்த முடிவை 13 பல்கலை. துணைவேந்தர்களில் இவர் ஒருவர் மட்டும் ஏற்காமல் இருக்கிறார். யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிகளுக்கு உட்பட்டே அரசு முடிவு எடுத்துள்ளதால் தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஏஐசிடிஇ மின்னஞ்சல் அனுப்பிய தகவல் உயர்கல்வித் துறைக்கு2 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும், யுஜிசி வெளியிட்ட வழிகாட்டுதலில் அரியர் பாடங்களுக்கு கட்டாயம் தேர்வுகள்நடத்தியே தேர்ச்சி வழங்க அறிவுறுத்தி உள்ளதாகவும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x