Published : 13 Aug 2020 03:46 PM
Last Updated : 13 Aug 2020 03:46 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல், மறுகூட்டலுக்கான விண்ணப்பத் தொகையை இணைய வழியில் செலுத்த முடியாத மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்பு வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும் எனத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
''2019-20 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வர்களில் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 24 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பின்னா் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் நகல் கட்டணத் தொகையைத் தனியாகவும், மறுகூட்டல் விண்ணப்பக் கட்டணத்தைத் தனியாகவும் ஜூலை 31-ல் இணைய வழியாகச் செலுத்த வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொகையை ஜூலை 31-ம் தேதி இணையத்தின் மூலமாக செலுத்த இயலாத மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்களை அனைத்து உதவி இயக்குநர்களும் தங்கள் அலுவலகப் பயனாளர் குறியீடு, கடவுச்சொல் மூலம் அறிந்து, அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கான கட்டணத்தைத் தனித்தனியாகக் கேட்பு வரைவோலையாக எடுத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆக.14-ம் தேதி ஒப்படைக்குமாறு தெரிவிக்க வேண்டும்.
பின்னா், உதவி இயக்குநர்கள், தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்ட கேட்பு வரைவோலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டண விவரங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட கேட்பு வரைவோலைகள் ஆகியவற்றை ஆக.17-ம் தேதிக்குள் துணை இயக்குநர் (பொது) பெயரிட்ட முகவரிக்குப் பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT