Published : 28 Jul 2020 05:47 PM
Last Updated : 28 Jul 2020 05:47 PM
ஆன்லைனில் முதுநிலை மருத்துவ (எம்டி, எம்எஸ், எம்டிஎஸ்) இறுதிக்கட்டக் கலந்தாய்வு நாளை நடக்கிறது. உச்ச நீதிமன்றப் பரிந்துரைப்படி வரும் 31-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைத் தனியார் கல்லூரி நிறுவனங்கள் நிரப்பிடச் சுகாதாரத் துறைச் செயலரிடம் மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சென்டாக் மருத்துவ முதுநிலைக் கலந்தாய்வு மூலம் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் மருத்துவப் படிப்புகளில் பலர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அங்கு கல்லூரிகளில் சேர்க்கைக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்ளை நேரடியாகச் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நாளை (ஜூலை 29) முதுநிலை மருத்துவ இறுதிக்கட்ட மற்றும் மாப் அப் ஆன்லைன் கலந்தாய்வு நடக்கிறது.
இது தொடர்பாக புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல்வாழ்வு சங்கத்தலைவர் பாலா கூறுகையில், "இறுதிகட்டக் கலந்தாய்வில் ஸ்லைடிங் மூலம் வேறு கல்லூரிக்கு மாற்றல் ஆகும் மாணவர்கள் வெவ்வேறு பாடப்பிரிவுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. ஆதலால், ஏற்கெனவே முதல் மற்றும் இரண்டாம் கலந்தாய்வின் மூலம் தேர்வு பெற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் நேரடியாகச் செலுத்திய கட்டணங்களை எவ்விதக் கழிவுமின்றி முழுமையாகத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருணிடம் மனு தந்துள்ளேன்.
இறுதிகட்டக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களின் விவரங்களைச் சுகாதாரத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும். அதேபோல் மாப் அப் ஆன்லைன் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள நிரப்பப்படாத காலி இடங்களைப் புதுச்சேரி மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் இருந்து சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அளிக்க வேண்டும். நிரப்பப்படாத இடங்களை அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப்படி முழுமையாக நிரப்பவேண்டும்.
உச்ச நீதிமன்றப் பரிந்துரைப்படி வரும் 31-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தனியார் கல்லூரி நிறுவனங்கள் நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT