Published : 22 Jul 2020 02:22 PM
Last Updated : 22 Jul 2020 02:22 PM
கரோனா காலத்தில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களைப் பெற முடியாமல் புதுச்சேரி, காரைக்கால் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். இதையடுத்துப் பழைய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கப் பள்ளிகளிலேயே ஒருங்கிணைந்த சான்றுகள் தரப்பட்டன. ஆனால், தற்போது அச்சான்று காலாவதியாகி விட்டதாகவும், மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது புதிய சான்று பெற்று வரவேண்டும் என்றும் கூறப்பட்டது.
தற்போது கரோனா காலம் என்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளைச் சந்தித்து சாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகளைப் பெற முடியாமல் மாணவ, மாணவிகள், பெற்றோர் அவதியடைந்தனர். அத்துடன் அரசு அலுவலகங்கள், இணையதள மையங்கள் ஆகியவற்றில் விண்ணப்பிக்க ஏராளமானோர் காத்திருப்பதால் நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டது.
இந்நிலை தொடர்பாக அரசிடம் பலரும் புகார்கள் தெரிவித்தனர். இச்சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
''2020-21 ஆம் கல்வியாண்டுக்கான தொழிற்முறை படிப்புகள், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்குக் கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள் ஆன்லைனில் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அப்போது சாதி, குடியிருப்புச் சான்றுகள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று பரவியுள்ளதால் புதிதாகச் சான்று பெறுவதில் சிரமம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் கடந்த 2018-ம் ஆண்டு அல்லது அதற்குப் பின்பு பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றுகளை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யலாம். பிறகு ஒரு மாதத்துக்குள் புதிய சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்."
இவ்வாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT