Published : 21 Jul 2020 06:30 PM
Last Updated : 21 Jul 2020 06:30 PM
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேவயானி. அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்த இவர் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு, 500 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அவரது தந்தை கணேசன், தாய் லெட்சுமி இருவரும் குறி சொல்லும் தொழில் புரிகின்றனர். இவர்களுக்கு 6 பிள்ளைகள். இவர்களில் 3-வது மகள் தான் தேவயானி.
இவரது மூத்த சகோதரி ஏற்கெனவே பிளஸ்-2 தேர்ச்சி பெற்று வறுமையால் மேல் படிப்பைத் தொடர முடியாத சூழலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தேவயானிக்கும் அதே சூழல் இருந்தாலும், அவர் பட்டப்படிப்பு முடித்து, ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவில் அரசின் உதவியை எதிர்பார்க்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியது:
திருப்பரங்குன்றம் ஜே.ஜே. நகர் காட்டுநாயக்கர் குடியிருப்பில் வசிக்கிறேன். வீட்டில் மின் விளக்கு வசதியின்றி தெரு விளக்கில் படித்தேன். காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த எங்களது உறவினர் பலரும் பள்ளிக்கூடமே சென்றதில்லை.
இருப்பினும், பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்த நான் கல்லூரி முடித்து ஐஏஏஸ் ஆகவேண்டும் என்பது கனவு. கல்லூரி படிக்க வசதியின்றி எம்எல்ஏ சரவணனிடம் உதவி கேட்டோம். அவரும் செய்யவதாகக் கூறியுள்ளார்.
மேலும், நான் படித்த பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் மதுரை ஆட்சியரை சந்திக்கவுள்ளேன். உதவிகேட்டு ஆட்சியரிடம் மனு கொடுப்பேன்.
பெற்றோர் குறி சொல்லப் போனால் மட்டுமே வருமானம் கிடைக்கும். இது போன்ற சூழலில் மேற்படிப்பு படித்து ஆட்சியராகி என்னைப் போன்ற நலிந்த மக்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது எனது லட்சியம்.
போதிய பொருளாதாரமின்றி தவிக்கும் எனக்கு கல்லூரி படிப்பில் சேர அரசு உதவ வேண்டும். என்னை பார்த்து எனது சமூகத்தினர் பலரும் கல்லூரியில் படிக்க வாய்ப்பு ஏற்படும் என, நம்பிக்கை தெரிவித்தார் தேவையானி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT