Published : 06 Jul 2020 02:02 PM
Last Updated : 06 Jul 2020 02:02 PM
11-ம் வகுப்புப் பாடத்தொகுப்பில் இனி பழைய நடைமுறையே தொடரும் எனவும் புதிய பாடத்தொகுப்பு முறை ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளைப் பள்ளியில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்படி, பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, புதிதாக 3 முதன்மைப் பாடத் தொகுப்புகளை மட்டும் அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வியில் பயில விரும்பும் படிப்புக்கு, 11-ம் வகுப்பில் சேரும்போதே தேர்வு செய்து, அதற்கேற்பக் கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய அறிவிப்பின்படி, பிரிவு- 3 (கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்) மற்றும் பிரிவு 4- ல் (வேதியியல், உயிரியல், மனையியல்) சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கோ அல்லது பொறியியல் படிப்புக்கோ விண்ணப்பம் செய்ய இயலாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் புதிய பாடத்தொகுப்பு முறையை நீக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் 11-ம் வகுப்புப் பாடப் பிரிவுகளின் தேர்வுக்கு இனி பழைய நடைமுறையே தொடரும் எனவும் புதிய பாடத்தொகுப்பு முறை ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய அரசாணையின்படி, ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் எனவும், பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பிட்ட பழைய அரசாணை ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT