Published : 04 Jul 2020 01:18 PM
Last Updated : 04 Jul 2020 01:18 PM
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வரும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்படது. 12-ம் வகுப்புக்கு மட்டும் சில தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆரம்ப வகுப்புகளுக்குக் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழியில், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, மே 13-ம் தேதி சிபிஎஸ்இ சார்பில் வெளியான அறிக்கையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இப்போது மீண்டும் வெளியாகியுள்ள அறிக்கையில், அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT