Published : 06 Jun 2020 08:00 PM
Last Updated : 06 Jun 2020 08:00 PM

ஜூலை 3-ம் வாரத்துக்குள் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 

10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்துக்குள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதற்கிடையே கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டன. தொற்று அச்சத்தால் தேர்வெழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதேபோல 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வை சுமார் 9.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்நிலையில், 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''தமிழக முதல்வர் கட்டளையின் அடிப்படையில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளை ஜூலை மாதம் 3-வது வாரத்திற்குள் வேகமாக நிறைவேற்ற வேண்டுமென்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அதனடிப்படையில் அந்த அறிவுரைகளை ஏற்றுப் பணிகள் நிறைவேற்றப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையன் ஜூலை மாதத்தில் தேர்வுகள் வெளியாகலாம் எனவும் தேதியைச் சரியாகக் குறிப்பிட்டுக் கூற முடியாது என்றும் மே 30-ம் தேதி தெரிவித்திருந்தார்.

ஜூன் மாதம் முதல், ஆன்லைனில் வகுப்புகளை நடத்த பல்வேறு பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதற்கிடையே புதிய கல்வி ஆண்டில் கற்பித்தல் பணிகள் தாமதமாகும் என்பதால், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்கத் திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x