Published : 11 Mar 2020 04:45 PM
Last Updated : 11 Mar 2020 04:45 PM

கரோனா: ஸ்ரீநகரில் அனைத்துக் கல்வி நிலையங்கள், அரங்குகள் மூடல்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, காஷ்மீரின் ஸ்ரீநகரில் அனைத்துக் கல்வி நிலையங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் அஸிம் மட்டு கூறும்போது, ''கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தவிர்க்க முடியாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீநகர் மாநகராட்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சுத்தப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக, அனைத்துக் கல்வி நிலையங்கள், பொது விடுதிகள், விளையாட்டு விடுதி மற்றும் அரங்கங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை கால வரையறை இன்றி மூடப்படுகின்றன. அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில் 1000 தனிமைப்படுத்தல் உடல் உபகரணங்கள் மற்றும் தெளிப்பான்கள் வாங்கப்பட உள்ளன. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழு சுகாதார நிலையில் வைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

அத்துடன் கரோனாவுக்கு எதிராக ஜம்மு, காஷ்மீர் தயார் நிலையில் இருக்க மாநாகராட்சி ஆணையருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, சாலையோர வியாபாரிகளிடம் காய்கறிகள், வீட்டுப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x