Published : 04 Mar 2020 04:29 PM
Last Updated : 04 Mar 2020 04:29 PM
தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றாக வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதை வில்லியனூர் கொம்யூன், கீழ்சாத்தமங்கலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் வழங்கி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வழக்கமாகவே மாற்றியுள்ளனர். முன்னுதாரணமான இந்தச் செயல் பலரையும் கவர்ந்துள்ளது.
அண்மையில் இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தை நெகிழி இல்லாப் பள்ளி வளாகமாக அறிவித்து பள்ளியில் இருந்த அனைத்து வகை நெகிழிகளையும் சுத்தம் செய்தனர்.
இந்நிலையில் தற்போது பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவினை வாழை இலையில் சாப்பிடும் வழக்கத்தை கடந்த நான்கு மாதமாகத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். வாழை இலையில் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும், ஆரோக்கியமாக வாழ முடியும் என குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்களின் இந்த முயற்சியை கல்வித்துறை அதிகாரிகளும் பாராட்டுகின்றனர். இதுபோன்ற சமூக மற்றும் சூழல் அக்கறை சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவும் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர்.
இதற்காக சிறு வாழைத் தோட்டத்தையே உருவாக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளதாகக் கூறுகிறார் தலைமை ஆசிரியர் லட்சுமணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT