Published : 02 Mar 2020 06:57 AM
Last Updated : 02 Mar 2020 06:57 AM

பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்; 8.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்- முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழகம், புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்குகிறது. 8.35 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வுஎழுதுகின்றனர். முறைகேடுகளைதடுப்பதற்காக தேர்வின்போது மாணவர்கள் விடைத்தாளை பிரித்து வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, தேர்வு முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுத்தேர்வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்குகிறது. முதல்நாளில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன. இந்த தேர்வைதமிழகம், புதுச்சேரியில் மொத்தம்8 லட்சத்து 35 ஆயிரத்து 525மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். இதில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 மாணவிகள், 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 மாணவர்கள், 19,166 தனித்தேர்வர்கள், 62 சிறைக் கைதிகள் மற்றும் 2 திருநங்கைகள் அடங்குவர்.

தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 160 மையங்களில் 47,264 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடம் மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுய விவரங்களை சரிபார்க்கவும் தரப்படும்.அதன்பின் காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை 3 மணி நேரம்மாணவர்கள் தேர்வு எழுதலாம். சிறப்புச் சலுகையாக மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்படும்.

பொதுத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்வுத் துறைஎடுத்துள்ளது. தனித்தேர்வர்களுக்கு பிரத்யேக தேர்வு மையங்கள், பழைய மற்றும் புதிய பாடத்திட்ட குழப்பத்தை தவிர்க்க வெவ்வேறு நிறங்களில் வினாத்தாள்கள் தயாரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய மாற்றங்களை தேர்வுத்துறை செய்துள்ளது. இதுதவிர முதல்முறையாக, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அதிகாரிகள் செல்போன் பயன்படுத்தவும், மாணவர்கள் விடைத்தாள்களை பிரித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், மாணவர் வருகைப்பதிவு உள்ளிட்ட விவரங்களை தரைவழி தொலைபேசி மூலம் மட்டுமே மாவட்ட கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்தத் தேர்வின்போது 41,500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 296 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். இதுதவிர, முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். செல்போன் உட்பட மின்சாதனங்களை கொண்டுவரக் கூடாது. விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் கலர் பென்சில்,பேனாக்கள் கொண்டு எழுதக்கூடாது.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்துஎழுதுதல், தேர்வு அதிகாரியிடம்முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர்மீது விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

கட்டுப்பாட்டு அறை

பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களைத் தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையை, 93854 94105, 93854 94115, 93854 94120 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம். 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 24-ம் தேதியுடன்முடிவடைகின்றன. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ல் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 1 தேர்வுகள்

அடுத்ததாக பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x