Published : 21 Feb 2020 05:41 PM
Last Updated : 21 Feb 2020 05:41 PM
கலை நிகழ்ச்சியில் மலைவாழ் கிராம மாணவர்கள் அசத்தினர். அத்துடன் விழிப்புணர்வு நிகழ்வால் மகிழ்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலைவாழ் பகுதி மாணவர்களின் சிறப்புக் கலை நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நேற்று இரவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று நடந்த விழிப்புணர்வு நிகழ்வு புத்துணர்வைத் தந்ததாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.
புதுச்சேரியின் சமுதாய சேவா மையம் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை கிராமத்தில் சிறப்புக் கல்வி மையத்தை நடத்தி வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்புக் கலைப் பயிற்சியினை இத்தாலி கலைஞர்கள் அளித்தனர். இதன் கலை விழா புதுச்சேரி காந்தி திடலில் நேற்று இரவு நடைபெற்றது. சமுதாய சேவா மைய நிறுவனர் நேரு தலைமை ஏற்க, நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினர் லக்ஷ்மி நாராயணன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இத்தாலி நாட்டின் தேசியக் கொடியுடன் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி காந்தி சிலை முன்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று பூர்ணாங்குப்பத்தில் நடந்த கிராம விழிப்புணர்வு நிகழ்வில் மலைகிராம மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தன்னம்பிக்கை வகுப்பு, கற்கும் திறன், வாழ்வியல் மேம்பாடு, பெண் குழந்தை பாதுகாப்பு எனப் பல தலைப்புகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்வுக்குப் பிறகு மாணவ, மாணவிகள் கூறுகையில், ''மலை மேல் உள்ள வாழ்க்கைதான் நாங்கள் அறிந்தது. சமதளப் பரப்பில் உள்ள வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. தனிமை அதிக அளவில் இருக்கும். தற்போது எளிதாக அனைவருடன் பழகும் வாய்ப்பு சிறப்பாக இருந்தது. குறிப்பாக மகிழ்வும், புத்துணர்வும் ஏற்பட்டது" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT