Published : 17 Feb 2020 10:16 AM
Last Updated : 17 Feb 2020 10:16 AM
சர்வதேச தாய்மொழி தினத்தை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
உலகில் பேசப்படுவதாக இதுவரை அறியப்படும் 6000 மொழிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மொழிகளின் அழிவால் அம்மொழியை பேசும் சமூகமே ஒட்டுமொத்தாமாக அழிவை நோக்கித் தள்ளப்படுகிறது. நமது நவீன கல்விமுறையும் வாழ்க்கை முறையும் சில நூறு மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறது. இந்தச் சூழலில் உலக மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கவும் மொழிரீதியான பண்பாட்டுரீதியான பன்மைத்துவத்தைப் பேணவும் உலகின் பன்மொழித்தன்மையைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி நாளாக 2000-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை அனுசரித்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம் எழுதி உள்ளது. அதில், ''பிப்ரவரி 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி நாளாகக் கொண்டாட வேண்டும். சிவராத்திரியை முன்னிட்டு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டால், ஒரு நாள் முன்னதாகவோ, கழித்தோ தாய்மொழி தினத்தைக் கொண்டாடலாம்.
இந்த நாளை சொற்பொழிவு, விவாதம், பாட்டு, கட்டுரை, ஓவியம், இசை, நாடகம், கண்காட்சிகள் என எந்த வடிவத்திலும் கொண்டாடலாம். நம் தாய்மொழியோடு மற்ற இந்திய மொழிகளையும் அதன் கலை, இலக்கியம், வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தாய்மொழி தினத்தன்று நடத்தப்பட்ட போட்டிகள்/ நிகழ்ச்சிகளின் விவரங்களை பிப்.22-ம் தேதி மாலை 5 மணிக்குள் www.ugc.ac.in/uamp என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT