Published : 13 Feb 2020 10:41 AM
Last Updated : 13 Feb 2020 10:41 AM

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு

சென்னை

தமிழக பட்ஜெட்டில், அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசியுடன் பாடத்தில் கவனம் செலுத்த முடியாத என்பதால் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டது மதிய உணவுத் திட்டம். முன்னாள் முதல்வர் காமராஜா் கொண்டு வந்த இத்திட்டம் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது. பின்னர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்தைக் கருத்தில் கொண்டு முட்டையும் வழங்கப்பட்டது.

இன்றளவும் இந்தியாவில் ஒரு முன்னோடித் திட்டமாக சத்துணவுத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை தற்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுவும் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

மேலும், தற்போது நடைமுறையில் இருக்கும் உணவுப் பட்டியலில் சில மாற்றங்களோடு காலை உணவுத் திட்டத்தில் பச்சைப்பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி, கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வரும் கல்வியாண்டிலிருந்தே இந்தக் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. ஒருவேளை இது நடைமுறைப்படுத்தப்பட்டால் 65 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x