Published : 11 Feb 2020 08:11 AM
Last Updated : 11 Feb 2020 08:11 AM
தஞ்சாவூர் பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் 8-வது அதிசயமாக இடம்பெறச் செய்வதற்காக ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கி.பி.1003-ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டுமானம் நிறைவு செய்யப் பெற்றது தஞ்சாவூர் பெரிய கோயில். இந்தக் கோயில் சிமென்ட் பூச்சு போன்ற எதுவும் பயன்படுத்தாமல் அடுக்குமானம் என்ற முறையில் ஒரு கல்லுடன் மற்றொரு கல்என இணைக்கப்பட்டும், சுண்ணாம்பு போன்ற கலவைகளைப் பயன்படுத்தியும் கட்டப்பட்டது. இது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழக கட்டுமானக் கலையின் உதாரணமாகும்.
இந்தக் கோயிலை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு கடந்த 1987-ம் ஆண்டு அறிவித்து, பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில், இக்கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்காக ஒருங்கிணைப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்லியல் கட்டுமானவல்லுநரும், இந்து சமய அறநிலையத் துறையின் பாரம்பரிய கட்டுமான கமிட்டி உறுப்பினரும், ‘தஞ்சாவூர் பெரிய கோயில் 8-வது உலக அதிசயம்’ என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
உலக அதிசயங்கள் ஏழு என்பார்கள், தற்போது 8-வது அதிசயமாக தஞ்சாவூர் பெரிய கோயிலைஇடம்பெறச் செய்ய ‘தஞ்சாவூர் பெரிய கோயில் 8-வது உலக அதிசயம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை மண்ணைச் சேர்ந்த பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.
இதற்காக பிரத்யேக இணையதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதில், ஆதரவு திரட்டப்படும். மேலும், விரைவில் நாடெங்கிலும் உள்ள தமிழர்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை உலக அதிசயங்கள் பட்டியலை அறிவிக்கும் அமைப்பிடம் வழங்க உள்ளோம். இதற்கான பணிகளை குடமுழுக்கு விழாவின்போதே தொடங்கி விட்டோம்.
இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT