Published : 10 Feb 2020 11:21 AM
Last Updated : 10 Feb 2020 11:21 AM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் சுடரை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அனா கோரகாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும்ஜூலை 24-ம் தேதி ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 9-ம்தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்க உலகில் உள்ள பல்வேறுநாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தீவிரமாக தங்களை தயார்ப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி வரும் மார்ச்12-ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஏற்றப்பட உள்ளது. இதற்கிடையே இந்த ஜோதியை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கியை தேர்வு செய்துள்ளது ஹெலெனிக் ஒலிம்பிக் குழு.
இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதும் கைகளில் பெறும் முதல் பெண் என்ற பெருமையை பெற உள்ளார் கோராக்கி. கடந்த 2016-ம்ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அனா கோரகாக்கி 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார்.
இதே ஒலிம்பிக்கில் போல் வால்ட்டில் தங்கம் வென்ற கிரீஸின் கேத்ரினா ஸ்டெபானிடி பனதேனாயிக் ஸ்டேடியத்தில் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜோதியை டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்களிடம் வழங்குவார். அதன் பின்னர் அந்த ஜோதியானது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியாக டோக்கியோவை சென்றடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT