Published : 10 Feb 2020 08:10 AM
Last Updated : 10 Feb 2020 08:10 AM

செய்திகள் சில வரிகளில் - பள்ளிகளில் கொடுமை: தகவல் தெரிவிக்க சிறுமி உருவாக்கிய ‘ஆப்’

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள 9 வயது பள்ளி மாணவி புதிதாக ஒரு செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார்.

ஷில்லாங்கை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி மெய்டைபஹூன் மஜாவ். பள்ளியில் சேர்ந்த நாள் முதலே சக மாணவர்களின் கொடுமைகளை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து மஜாவ் கூறுகையில், “பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை அதிகமாக வெறுத்தேன். வேறு எந்த குழந்தையும் கொடுமை அனுபவிக்க கூடாது என்று நினைத்தேன். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து புதிய ‘ஆப்’ உருவாக்கினேன்’’ என்றார்.

இந்த ‘ஆப்’ விரைவில் ‘கூகுள் பிளே’வில் கிடைக்கும். இதில் தன் அடையாளத்தைத் தெரிவிக்க விரும்பாத குழந்தைகள், தங்களுக்கு அல்லது மற்ற குழந்தைகள் ஏற்படும் கொடுமைகளைப் பற்றி தகவல் தெரிவிக்க முடியும். அதைப் பார்த்து ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் நேற்று கூறியதாவது:

தென் தமிழகம் முதல் மகாராஷ்டிர மாநிலம் வரை நிலவி வந்த காற்று சுழற்சி வலுவிழந்துவிட்டது. தற்போது வங்கக் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தமிழகம் நோக்கி வீசி வருகிறது. அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான தூரல் மழை பெய்யக் கூடும். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, பகல்நேர வெப்பநிலையில் அதிகபட்சமாக மதுரை தெற்கில் 35.6 டிகிரி பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x