Published : 31 Jan 2020 04:19 PM
Last Updated : 31 Jan 2020 04:19 PM

குரூப்- 4 தேர்வு: புதிய பதிவெண் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப்- 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிய பதிவெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.

இதில் தரகர்களாகச் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குரூப் 4 தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் தேர்வு ரத்து செய்யப்படாது விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களை நீக்கிவிட்டு, புதிய 39 பேரின் பதிவெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பதிவெண் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 7-ம் தேதி வரை ஆன்லைனில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x