Published : 30 Jan 2020 01:02 PM
Last Updated : 30 Jan 2020 01:02 PM

ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு: 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நிதியுதவி அளித்த தமிழக ஆளுநர்

ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க, 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளைக்கு தமிழக ஆளுநர் ரூ.2 கோடிக்கான காசோலையை அளித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளை மூலம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 5,000 மாணவர்களுக்குக் காலை உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் வெற்றிகரமான பயணத்தை அடுத்து, க்ரீம்ஸ் சாலையில் 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளை மாபெரும் சமையலறை ஒன்றைக் கட்ட உள்ளது. இதற்கான உத்தேச செலவு ரூ.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைக் கட்டி முடிப்பதன் மூலம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவை அளிக்க 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக, ரூ.2 கோடியை தனது விருப்ப நிதியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.

அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோதண்டராம தாசாவிடம் ரூ.2 கோடிக்கான காசோலையை ஆளுநர் புரோஹித் வழங்கினார். மீதமுள்ள தொகையானது அடுத்தடுத்த காலகட்டங்களில் விடுவிக்கப்படும் எனவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜன.25-ம் தேதி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தச் சமையல் அறையானது அடுத்த 6 மாதங்களில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 12,000 ஏழை மாணவர்களுக்குக் காலை உணவு அளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x