Published : 24 Jan 2020 08:49 AM
Last Updated : 24 Jan 2020 08:49 AM
இந்திய கபடி அணிக்கு, திருப்பூர் மாநகராட்சிப் பள்ளி மாணவி யாழினி தேர்வாகியுள்ளார். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் ஜி.யாழினி. இவர் அஸ்ஸாம் மாநிலத்தில் தேசியஅளவில் நடந்த கபடி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடினார். அப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து மாணவி ஜி.யாழினி, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
இது குறித்து மாணவி யாழினி கூறும்போது, 'என்னுடைய பாட்டி சரஸ்வதியின் பாதுகாப்பில்தான் படித்து வருகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கியவர் பாட்டிதான். பல்வேறு சிரமங்களுக்கு இடையே படித்து வருகிறேன். பல பள்ளிகள் மாறி விட்டேன். சிறு வயது முதலே கபடி விளையாடி வருவது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இதனால் தொடர்ந்து கபடி விளையாடி வருகிறேன். இதனால் தொடர்ச்சியாக பள்ளி அளவில் நடந்த கபடி போட்டிகளில் பங்கேற்றேன்.
கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக, பள்ளி அளவில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறேன். தற்போது அசாமில் நடந்ததேசியப் போட்டியில் பங்கேற்று விளையாடினேன். இதையடுத்து எனதுஆட்டத்திறனை பார்த்த தேர்வாளர்கள், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். மனம் தளராமல் முயற்சி செய்ததால், இந்திய அணியில் இடம் கிடைத்ததாக கருதுகிறேன்.
நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்
தொடர்ந்து கபடி விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். இதற்காக தொடர்ந்து உழைக்க தயாராகஉள்ளேன். என்னை இந்தளவுக்கு ஊக்கம் அளித்து கொண்டு வந்தகபடி பயிற்சியாளர் தாஸ், எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்டெல்லா,விளையாட்டு ஆசிரியைகள் மோகனசுந்தரி, லாவண்யா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
இந்திய கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள யாழினியை சகமாணவிகள், ஆசிரியைகள், பெற்றோர்ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT