Published : 23 Jan 2020 01:12 PM
Last Updated : 23 Jan 2020 01:12 PM
ஒருங்கிணைந்த வைஃபை கருவியை வடிவமைத்த 8-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி பாக்கியலட்சுமி தேசியப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவியல் தொழில்நுட்பத்தின் கீழ் இன்ஸ்பயர் மானக் அறிவியல் கண்காட்சி, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும்.
அதில் பங்கேற்க படைப்புகளைத் தேர்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான இன்ஸ்பையர் முகாம் புதுவை ஜீவானந்தம் அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி பாக்கியலட்சுமி அறிவியல் ஆசிரியர் ஜெயசுந்தர் வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த வைஃபை என்கிற அறிவியல் உபகரணத்தை வடிவமைத்திருந்தார். அதில் தேர்வு பெற்ற அவர் மாநிலத்தில் இருந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மாணவி பாக்கியலட்சுமி, அறிவியல் வழிகாட்டி ஆசிரியர் ஜெயசுந்தர் ஆகியோர் கூறுகையில், "ஆல் இன் ஒன் வைஃபை ஆண்டனா கருவியை வடிவமைத்துள்ளோம். இதில் 500 மீ. வரை சிக்னல் பெறவும், அனுப்பவும் முடியும். டிவி சிக்னல் கிடைத்துப் பார்க்க முடியும். எப்எம் ரேடியோ, வைஃபை சிக்னல் இதில் கிடைக்கும்.
ஐஐடி பேராசிரியர்கள் இப்படைப்பைப் பார்த்துத் தேர்வு செய்தனர். அடுத்தகட்டமாக சென்னை ஐஐடி வளாகத்தில் பயிற்சிப் பட்டறை நடக்கும். பின்னர் தேசிய அளவிலான போட்டி நடக்கும். அதில் வென்றால் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் முன்பு படைப்பு காட்சிப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டனர்.
புதுச்சேரியில் இருந்து தேசியப் போட்டிக்குத் தேர்வான ஒரே அரசுப் பள்ளியான மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி மாணவி பாக்கியலட்சுமி, அறிவியல் வழிகாட்டி ஆசிரியர் ஜெயசுந்தர் ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியை இளஞ்சியம் பாராட்டிக் கவுரவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT