Published : 22 Jan 2020 11:52 AM
Last Updated : 22 Jan 2020 11:52 AM
அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைத்து 5 மற்றும் 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''5 மற்றும் 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைத்து நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களே கேள்வித் தாள்களைத் தயாரித்து வழங்கும். தேர்வுக்கு முந்தைய நாளோ அல்லது தேர்வன்றோ கேள்வித்தாள்கள் பிரதி எடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகள் நீங்கலாக பிற பள்ளிகளில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.100 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200 ஆகும்''. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அடிப்படைத் திறன்களைச் சோதிக்கும் வகையில் பொதுத் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. எனினும் மாதிரி வினாத்தாள் இன்னும் வெளியாகாததால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT