Published : 19 Jan 2020 08:31 AM
Last Updated : 19 Jan 2020 08:31 AM
சத்துணவில் மாணவர்களுக்கு பிடித்த உணவு வகை எது என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் கருத்து கேட்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 43,283 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
வெஜிடபிள் பிரியாணியுடன் மிளகு முட்டை, கருப்பு கொண்டைக்கடலை புலாவுடன் தக்காளி மசாலாமுட்டை, தக்காளி சாதத்துடன் மிளகு முட்டை, சாதம், சாம்பாருடன் வேகவைத்த முட்டை, கருவேப்பிலை, கீரை சாதத்துடன் மசாலா முட்டை என பல்வேறு உணவு வகைகள் மதிய உணவாக வழங்கப்படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் உணவு வகைகளில் மாணவர்களுக்கு எது ரொம்ப பிடிக்கிறது என தெரிந்துகொள்ள சமூகநலத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களிடம் கருத்து கேட்கும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சத்துணவில் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வந்தாலும், மாணவர்களுக்கு ரொம்ப பிடித்தமான உணவு வகைகள் எவை என்று தெரிந்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இதுபற்றி கேட்டால், சாதம், சாம்பார் பிடிப்பதாக ஒருசில மாணவர்கள் கூறுகின்றனர். ஒருசிலர் தயிர், கீரை சாதங்கள் பிடிப்பதாக கூறுகின்றனர். இது கொஞ்சம்கூட பிடிக்காது என்று கூறும் மாணவர்களும் உள்ளனர்.
எனவே, ஒட்டுமொத்தமாக மாணவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை கண்டறிய தமிழகம் முழுவதும் கருத்து கேட்கும் பணி நடந்து வருகிறது. மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை தொகுத்து, அறிக்கையாக தயாரித்து, அரசிடம் தாக்கல் செய்ய உள்ளோம். இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் சத்துணவு வகைகளில் மாற்றம் செய்யப்படுமா என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அதுகுறித்து அரசுதான் முடிவு எடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT