Published : 09 Jan 2020 01:19 PM
Last Updated : 09 Jan 2020 01:19 PM
வானவில் என்றழைக்கப்படும் பல்வேறு கலைப் போட்டிகளில் ஆர்வமுடன் அரசு பள்ளி மற்றும் பால்பவன் குழந்தைகள் இன்று பங்கேற்றனர்.
அரசு பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சமக்ர சிக்ஷா சார்பில் வானவில் என்ற ரங்க உத்சவ் போட்டிகள், புதுச்சேரி மாவட்ட அளவிலான போட்டிகள் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் இன்று காலை தொடங்கின.
அரசுப் பள்ளி மற்றும் பால்பவன்களில் பயிலும் குழந்தைகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பால்பவன் பயிற்றுநர்களுக்காக இப்போட்டிகள் நடப்பதாக போட்டியின் திட்ட அதிகாரி பாஸ்கர ராசு தெரிவித்தார்.
போட்டிகளுக்குத் தலைமை வகித்த அவர் மேலும் கூறுகையில், "ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்போருக்கு வாய்ப் பாட்டு, ஓவியம், மாறுவேடப் போட்டி, தனி நடனம், இசைக்கருவி மீட்டல் மற்றும் வாசித்தல், நாடகம், நாட்டுப்புறக் குழு நடனம் ஆகியவை இன்று காலை தொடங்கின.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்போருக்கு மாறுவேடப் போட்டிகள், நாட்டுப்புற குழு நடனம், நாடகம் ஆகியவை ஜனவரி 10-ம் தேதி (நாளை) நடக்க உள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியைகள், பால்பவன் பயிற்றுநர்கள் ஆகியோருக்கு தனி நடனம், இசைக் கருவி மீட்டல், வாய்ப்பாட்டு ஆகியவையும் நாளை நடக்கிறது.
போட்டிக்கு அத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் நடுவராக இருப்பர். போட்டியில் வெல்வோருக்கு ஜனவரி 19-ல் நடைபெறும் வானவில் நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பரிசளிக்கிறார். அன்றைய தினம் மக்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகளும் நடத்தப்படும்" என்று குறிப்பிட்டார்.
சமக்ர சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநர் தினகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தார். குழந்தைகளும் ஆர்வத்துடன் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT