Published : 09 Jan 2020 11:45 AM
Last Updated : 09 Jan 2020 11:45 AM
உலகின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான உலக புகழ்பெற்ற வால்ட் டிஸ்னியில் பணிபுரிய சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 47 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த வால்ட் டிஸ்னி நிறுவனம், உலகின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனம். சினிமா, அனிமேஷன் உள்ளிட்ட பொழுது
போக்குத் துறைகளில் முதலிடத்தில் உள்ளது.
வால்ட் டிஸ்னி தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தேவையான நபர்களை, உலகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு மூலம் நேரடியாகவே தேர்ந்தெடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் நேர்முகத் தேர்வை டிஸ்னி நிறுவனம் நடத்தி வந்தது. ரூபாய் 18 லட்சம் சம்பளம்
அதில், பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 47 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் சம்பளம் கிடைக்கவுள்ளது.
இதுதொடர்பாக சண்டிகர் பல்கலைக்கழக சர்வதேச உறவுத் துறையின் பேராசிரியை மீனு பரத்வாஜ் கூறியதாவது:
டிஸ்னி நிறுவனத்துக்கு சண்டிகர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2014-ம் ஆண்டு 5 மாணவர்கள், 2015-ல் 10 பேர், 2016-ல் 11 பேர், 2017-ல் 25 பேர், 2018-ல் 41 மற்றும் தற்போது 47 பேர் என இதுவரை 139 மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பல மாணவர்களுக்கு, பெரிய நிறுவனங்களில் வேலைச் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக ஆசை இருக்கும்.
அதை சண்டிகர் பல்கலைக்கழகம், தனது புதிய வழிமுறை கல்வியால் நிறைவேற்றி வருகிறது. டிஸ்னி மட்டுமல்லாது, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சண்டிகர் பல்கலை. மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு பேராசிரியை மீனு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT