Published : 08 Jan 2020 10:59 AM
Last Updated : 08 Jan 2020 10:59 AM
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த செவித்திறன் குறையுடைய மாணவர்கள் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக சாதனை படைத்தனர்.
அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காது கேளாதோருக்கான விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடைபெற்றன. இதில், புதுச்சேரி அரசு சமூக நலத் துறையின் கீழ் ஆனந்தரங்கப்பிள்ளை அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர்.
கைப்பந்து விளையாட்டில் 18 வயது மற்றும் 16 வயது பிரிவுகளில் இப்பள்ளியின் இரு சிறுவர் பிரிவு அணிகளும் முதல் இடத்தையும். 16 வயதுக்கான பிரிவில் இப்பள்ளியின் சிறுமியர் பிரிவு அணி 2-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஆறாவது தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் 18 வயது பிரிவில் சிறுமியர் அணி முதல் இடத்தையும், 16 வயது பிரிவில் சிறுமியர் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் வென்ற அணிகளை அமைச்சர் கந்தசாமி கவுரவித்தார்.
அத்துடன் மாணவர்களுக்குப் பயிற்சி தந்த சந்தோஷ், குழந்தைகளைப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் சண்முகவேலு, லூர்து செலின் எலிசா, வசந்தி மாலா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT