Last Updated : 04 Jan, 2020 11:03 AM

 

Published : 04 Jan 2020 11:03 AM
Last Updated : 04 Jan 2020 11:03 AM

மேடையில் பேசுவது தொடங்கி ஆங்கிலத்தை எளிமையாகக் கற்பது வரை: அறிவியல் மன்றக் குழந்தைகளுக்கு ஒரு வார சிறப்புப் பயிற்சி

புதுச்சேரி

மேடையில் பேசுவது தொடங்கி ஆங்கிலத்தை எளிமையாகக் கற்பது வரை அறிவியல் மன்றக் குழந்தைகளுக்கு ஒரு வார சிறப்புப் பயிற்சி புதுச்சேரியில் நடந்தது.

குழந்தைகளுக்கான அறிவியல் மன்றங்களை தேசிய அளவில் விஞ்ஞான் பிரச்சார் நடத்தி வருகிறது. அறிவியல் மன்ற மாணவர்களுக்கான ஒரு வார சிறப்புப் பயிற்சி முகாம் லாஸ்பேட்டையில் நடைபெற்றது. லாஸ்பேட்டை பகுதி அறிவியல் மன்றங்களில் இருந்து 44 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அறிவியல் மன்றங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் நோக்கவுரை ஆற்றினார்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி கூறுகையில், "பயமின்றி மேடையில் பேசுவது, கவிதை எழுதுவது, ஆங்கிலத்தை எளிமையாகக் கற்பது, கணக்கில் புதுமை, அன்றாட வாழ்வில் அறிவியல், கலை மற்றும் சிற்பம் செய்தல், உடல் நலம் உள்ளிட்ட தலைப்புகளில் மிகச்சிறந்த வல்லுநர்கள் இந்த முகாமில் பயிற்சி தந்தனர்.

நிகழ்ச்சியில் உடல் பாதுகாப்பு சிறப்பு முகாம், வேளாண்மை அறிவோம், கழிவுப் பொருட்களில் இருந்து பொம்மைகள் செய்தல் மற்றும் கல்விச் சுற்றுலாவாக கலை கைவினை கிராமம், மாங்குரோவ் காடுகள், அடல் டிங்கரிங் ஆய்வகம் ஆகிய இடங்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர்" என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த பயிற்றுனர்கள் ராஜேஸ்வரி மற்றும் லலிதா கூறுகையில், "பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தினோம். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முக்கியமாக மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சியும், புதைப் படிமங்கள் சேகரிப்புப் பயிற்சி, சேகரிப்புக் கண்காட்சி, தாவர இலைகளில் கைவினைகள், வான் அறிவியல், கிரகண மற்றும் வானியல் ஆகிய பயிற்சிகள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்பட்டன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x