Last Updated : 24 Dec, 2019 09:52 AM

 

Published : 24 Dec 2019 09:52 AM
Last Updated : 24 Dec 2019 09:52 AM

ஸ்ரீ ஹரிகோட்டாவில் கோவை அரசுப் பள்ளி மாணவர்கள்

விண்ணில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டை, ஸ்ரீ ஹரிகோட்டா சென்று பார்வையிட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளனர், கோவை செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ளது, சதீஸ் தவான் விண்வெளி ஏவுகணை தளம். இது ஆந்திர மாநிலத்தின் மணல் தீவு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், தனது விண்கலங்களை இங்கிருந்துதான் ஏவுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் இம்மையத்தில் இருந்தே ஏவப்பட்டது.

சமீபத்தில் இந்திய விண்வெளி மையத்தின் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் நிகழ்ச்சி,  ஹரிகோட்டாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர்.

இதன்படி கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் டி.சரண், பி.கௌதம் ஆகியோர் தங்கள் ஆசிரியைகளுடன் இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்துள்ளனர்.

இது குறித்து மாணவர்களுடன் சென்று வந்த வழிகாட்டி ஆசிரியைகள் எஸ்.ஃபெலிசியா ஜெனட், ஏ.ஆனந்தி ஆகியோர் கூறியதாவது: இவ்விரு மாணவர்களும் அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள்.

சென்னையில் உள்ள விண்வெளி அறக்கட்டளை நடத்திய, கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, சிறப்பான கட்டுரை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து இருவரும் ஸ்ரீ ஹரிகோட்டா வில் நடைபெற்ற பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அறக்கட்டளையினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் வழிகாட்டி ஆசிரியைகளாக நாங்கள் இருவரும் சென்று வந்தோம். விண்ணில் ஏவப்படவிருந்த ராக்கெட்டை சற்று தொலைவில் இருந்து பார்க்க முடிந்தது.

பின்னர் இந்திய விண்வெளி மையத் தலைவர் கே.சிவன் மற்றும் பிற விஞ்ஞானிகளையும் அவர்கள் ஆலோசனை நடத்தியதை மாணவர்களுக்கு காண்பித்தோம். பின்னர் ராக்கெட் ஏவுவதை எல்இடி திரையில் பார்க்க முடிந்தது. ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்ததை 8 நிமிடங்கள் வரை காண முடிந்தது.

இந்த ராக்கெட்டுடன் இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 10 செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன. அவை பிஎஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணுக்கு சென்று, அங்கிருந்து பிரிந்து செல்வது நன்றாகத் தெரிந்தது. இக்காட்சியை மாணவர்கள் பிரமிப்புடன் கண்டு ரசித்தனர்.

இந்தியா விண்ணுக்கும் அனுப்பும் ராக்கெட்டுகள் ஒவ்வொரு விதமான காரணத்துக்காக அனுப்பப்படுகின்றன. பிஎஸ்எல்வி 50-வது ராக்கெட் ஆகும். விஞ்ஞானி விக்ரம் சாரா பாயின் 100-வது பிறந்த தினத்தில் ஏவப்பட்டது, இதன் தனிச்சிறப்பு. பிஎஸ்எல்வி ராக்கெட் பருவநிலை குறித்து ஆராயவும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் தகவல் தொடர்பு குறித்து அறிந்து கொள்ளவும், எஸ்எல்வி ராக்கெட் ஆராய்ச்சிக்காகவும் அனுப்பப்படுகின்றன என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கினோம்.

இம்மாணவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளிகள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் இதுபோன்ற திறமை வாய்ந்த மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், அவர்களை எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டுச் செல்லும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்கள் டி.சரண், பி.கௌதம் ஆகியோர் கூறும்போது, 'மாணவர்களின் முன்மாதிரியாக விளங்கியவர் அப்துல் கலாம். அறிவியல் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படுவதற்கு, உந்து சக்தியாக விளங்கியவர். இதேபோல் பள்ளி கல்வித்துறை நடத்தும் அறிவியல் கண்காட்சிகள், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர உறுதுணையாக இருக்கின்றன.

தனியார் கல்லூரிகளும், அமைப்புகளும் எங்களுடைய அறிவியல் ஆர்வத்தை வெளிக்கொணர பல்வேறு கண்காட்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அறிவியல், தொழில்நுட்பத்தால் சுழலும் இவ்வுலகத்துக்கு ஏற்ற வகையில், மாணவர்களும் அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

ஸ்ரீ ஹரிகோட்டா சென்று வந்தது எங்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை பெற்றுத் தந்தது. ஆசிரியைகள் எங்களுக்கு நிறைய தகவல்களைச் சொல்லிக் கொடுத்தனர்.

இப்பயணம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அமைப்பினருக்கு, எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.

தலைமை ஆசிரியர் ஆர்.தேவகி கூறும்போது, ‘செட்டிப்பாளையம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் மிகவும் அரிது. எங்கள் பள்ளியில் மாணவர்களை எங்கு போட்டிகள் நடந்தாலும் ஆசிரியர்களுடன் அனுப்பி வைக்கிறோம். இதனால் அவர்கள் வெளியுலக அனுபவத்தைப் பெறுகின்றனர். சில போட்டிகளில் பரிசுகளும் பெற்று வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும் பாலான மாணவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளிகள். அவர்களுக்கும் வெளியுலகம் தெரியாது. எனவே தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆளாக்கும் கடமை ஆசிரியர்களையே சேருகிறது. எங்கள் பள்ளியில் நாங்கள் எங்களால் முடிந்தவரை மாணவர்களின் முன்னேற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

கடந்த ஆண்டு தேவகுரு என்ற மாணவர் தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு சென்று வந்தார். இந்த ஆண்டு இரு மாணவர்கள்  ஹரிகோட்டா சென்று வந்து, எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்போம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x