Published : 19 Dec 2019 11:16 AM
Last Updated : 19 Dec 2019 11:16 AM
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப்பின் 1996-ல் நடந்த உள்ளாட்சித்தேர்தல் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் முறையாக நடந்தது. தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மத்திய அரசு திட்ட நிதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் அண்மையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டுகட்டமாக, டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலை. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு ஜனவரி 2-ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறுவதாகக் கூறப்பட்ட செமஸ்டர் தேர்வு, ஜனவரி 3-ல் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT