Published : 04 Dec 2019 11:04 AM
Last Updated : 04 Dec 2019 11:04 AM

உயர்கல்விக்கு திறவுகோல் - 9: மீன்வள நிபுணர் ஆகலாம்!

எஸ்.எஸ்.லெனின்

மீன்வளம் மிக்க நமது நாட்டில், அத்துறை சார்ந்த படிப்புகளில் சேர்ந்து பயில்வோர் தற்போது அதிகரித்து வருகின்றனர். மீன் வளர்ப்பு, மீன் பிடிப்பு, விற்பனை, சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி, தொழில்நுட்பம் என அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் இத்துறையில் காத்திருக்கின்றன.

இதற்கு பி.எஃப்.எஸ்சி., (Bachelor of Fishery Science) எனப்படும் மீன்வள அறிவியல் பட்டப் படிப்பு படிக்கலாம். பல்வேறு அறிவியல் கலை கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகின்றன. எனினும் கொச்சினை தலைமையிடமாகக் கொண்ட ‘மத்திய மீன்வள, கப்பல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம்’ (CIFNET - Central Institute of Fisheries, Nautical and Engineering Training), வழங்கும் கப்பல்சார் அறிவியலை (Nautical science) உள்ளடக்கிய பி.எஃப்.எஸ்சி., படிப்பு மதிப்பு வாய்ந்தது. நான்காண்டு பி.எஃப்.எஸ்சி., பயில CIFNET என்னும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

கல்வித் தகுதி

ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் பிளஸ் 2 முடித்த, 17-20 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சியுடன் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்திருந்தால் போதும். விண்ணப்பிக்கும் ஆண்டில் தேர்வெழுதும் மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்களை நிரப்பி, அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். உடன் தேவையான ஆவணங்களுடன், வரைவோலையாக தேர்வுக் கட்டணத்தை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப முகவரி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம். விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரலில் தொடங்கும். மே மாதத்தின் உரிய கடைசி நாளுக்குள் விண்ணப்பித்தாக வேண்டும். நுழைவுத் தேர்வு ஜூனில் நடைபெறும்.

தேர்வு விவரங்கள்

கொள்குறிவகையிலான (Objective Type) வினாக்களுடன் எழுத்துத் தேர்வு அமைந்திருக்கும். தவறான விடைக்கு கால் (0.25) மதிப்பெண் கழிக்கப்படும். சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. நிறைவாக, நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பிளஸ் 2 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வு
ஆகியவை 40%+50%+10% என்ற அடிப்படையில் கணக்கிட்டு இறுதி செய்யப்படும்.

நேர்முகத் தேர்வு தொடர்ச்சியாக பார்வைத் திறனை சோதிக்கும் உடல்தகுதி தேர்வும் உண்டு. 10-ம் வகுப்பு முடித்தால் தொழிற்கல்வி4 ஆண்டு பி.எஃப்.எஸ்சி., அல்லாது பல்வேறு தொழிற்பயிற்சிகளுக்கும் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கை நடைபெறுகிறது.

2 ஆண்டு கால பயிற்சியான கப்பல் செலுத்துநர் பயிற்சி (VNC- Vessel Navigator course) உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x