Published : 29 Nov 2019 09:54 AM
Last Updated : 29 Nov 2019 09:54 AM
திருச்சி மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் 2,000 பேருக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குப்பை பிரச்சினையால் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் குப்பையை முறையாக கையாள்வதால் நேரிடும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் அவர்களது பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஒரே நேரத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் 2,000 பேருக்கு திடக்கழிவு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் பேசும்போது, ‘‘ஒவ்வொருவர் வீட்டில் உருவாகும் குப்பைக்கு அவர்களே பொறுப்பு. அந்தக் குப்பையை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
வீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். வீட்டில் கொசுப் புழு உற்பத்தி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை மாணவ, மாணவிகள் உறுதிமொழியாக ஏற்று செயல்பட வேண்டும்’’ என்றார். பள்ளியின் முதல்வர் ஜோசப் சகாயம், துணை முதல்வர் அருளப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT