Published : 27 Nov 2019 12:06 PM
Last Updated : 27 Nov 2019 12:06 PM

விஜயதசமியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை

விஜயதசமியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே தமிழகம் பள்ளிக் கல்வித்துறையில் முதலிடம் பெறும்.

விஜயதசமியின் போதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம்.

பெற்றோரோ மாணவர்களோ எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. டிசம்பர் மாதத்தில் கூட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குக் கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும். ஐந்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும். மிகவும் எளிமையான முறையிலேயே கேள்விகள் அமைக்கப்படும். அரசே அனைத்துக் கேள்வித் தாள்களையும் தயாரித்து பள்ளிக்கு அனுப்பும்.

பொதுத் தேர்வுகள் அனைத்தும் அந்தந்தப் பள்ளியிலேயே நடைபெறும். மாணவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் 2, 3 பேர் இருந்தால் மட்டும் அருகில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x