Published : 26 Nov 2019 09:29 AM
Last Updated : 26 Nov 2019 09:29 AM

சுற்றுச்சூழல் மாசு காரணமாக மக்கள் பாதிப்பு: காற்று, தண்ணீர், குப்பை அகற்றும் தரம் என்ன?- அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி

சுற்றுச்சூழல் மாசு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். காற்று, தண்ணீர் போன்றவற்றின் தரம் எப்படி இருக்கிறது. குப்பைகளை எப்படி அப்புறப்படுத்துகிறீர்கள் என்பதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தலைநகர் டெல்லியில் காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு, நவம்பர் 1-ம் தேதி 580 மேல் சென்று அவசரநிலையை ஏட்டியது. இதனால், மருத்துவ எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போதுடெல்லியில் காற்றின் தரம் அவசர நிலையில் இருந்து குறைந்தாலும், இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இதற்கிடையே, சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத் , கொல்கத்தா போன்ற நகரங்களிலும் காற்று மாசு அதிகமானது. இதுதொடர்பாக பல்வேறு பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து, நீதிபதிகள் பல கேள்விகள் எழுப்பினர்.

மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களின் செயல்திறன் மீது நீதிபதிகள்கடுமையான அதிருப்தி தெரிவித்தனர்.

மாநிலங்களின் தோல்வி காரணமாகஏற்பட்ட மோசமான காற்றின் தரத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏன் இழப்பீடு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயசருகுகளை எரிப்பதால் ஏற்படும் கடும்புகை ஆபத்தானது என்று கூறியதுடன், அரசு நிர்வாகம் மட்டுமல்ல, விவசாயிகளும் இதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும் என்று கூறினர்.

விவசாய பொருட்களை எரிக்கக் கூடாது என்று தடை விதித்த போதிலும், தொடர்ந்து காற்று மாசு ஏற்படுத்தி, டெல்லி மக்களை பலி கொடுக்க முடியாது. காற்று மாசுவை தடுப்பதில் மாநில அரசுகள் தோல்வியைசந்தித்துள்ளன. இனியும் இதை நாங்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா? காற்று மாசு உள்நாட்டுப் போரை விட மோசமானதல்லவா?டெல்லி காற்று மாசு காரணமாக லட்சக்கணக்கான மக்களின் ஆயுட்காலம் குறைந்துவிட்டது. காற்று மாசு காரணமாக மக்களை இறக்க விடப்போகிறீர்களா? இந்த எரிவாயு கிடங்கில் மக்கள் ஏன் இருக்க வேண்டும். இந்த தவறு நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லியில் அமைக்கப்படவுள்ள புகை கோபுரங்கள் குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் மத்திய மற்றும் மாநில அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். டெல்லியில் நீர் மற்றும் காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சினையில் மாநில அரசு விளையாடிக் கொண்டு இருக்கிறது. இது மிகப்பெரிய குற்றம். தூய்மையான குடிநீரைப் பெற மக்களுக்கு உரிமை உண்டு.

மேலும், சுற்றுச்சூழல் மாசு காரணமாக காற்று, தண்ணீர் போன்றவற்றின் அடிப்படையின் தரம் என்ன என்று அனைத்து மாநிலங்களும் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x