Published : 21 Nov 2019 03:21 PM
Last Updated : 21 Nov 2019 03:21 PM

பூங்கொத்துக்குப் பதில் புத்தகங்கள்: கேரள எம்எல்ஏவுக்குக் குவியும் பாராட்டு!

தன்னைப் பார்க்க வரும் மக்கள், பூங்கொத்துக்குப் பதில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்று கோரிய கேரள எம்எல்ஏவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரள மாநிலம், வட்டியூர்க்காவு தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பிரசாந்த். இவர் சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதையடுத்து உள்ளூர் அரசுப் பள்ளிகள் சில, தங்களின் மாணவர்களுக்கு நூலகங்களை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டன.

இதுதொடர்பாக கடந்த நவம்பர் 14-ம் தேதி எம்எல்ஏ பிரசாந்த், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னைப் பார்க்கும் மக்கள் அனைவரும் பூங்கொத்துக்குக்குப் பதிலாக புத்தகங்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அனைவரும் எம்எல்ஏவுக்குப் புத்தகங்களை அளிக்கத் தொடங்கினர். இதனால் தற்போது 3,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்துள்ளதாக பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவற்றைத் தனது தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதற்குப் பின்னால் உதவிய அனைவருக்கும் எம்எல்ஏ பிரசாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ பிரசாந்தின் செயலுக்குப் பொதுமக்களிடத்திலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x