Published : 02 Nov 2019 04:58 PM
Last Updated : 02 Nov 2019 04:58 PM
விருதுநகர்
தெற்காசிய அளவிலான ரோபோடிக் போட்டிக்கான மாநில தகுதிச் சுற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது.
அவிஸ்கார் என்ற தனியார் அமைப்பு சர்வதேச அளவில் ரோபோடிக் போட்டிகளை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்காசிய அளவிலான ரோபோடிக் போட்டிக்கான மாநில தகுதிs சுற்றுப் போட்டிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன.
இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், கேரளா மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என 250 மாணவ, மாணவிகள் 50 அணிகளாகப் பங்கேற்று தாங்கள் பிரத்யேகமாக வடிவமைத்த ரோபோக்களுடன் போட்டியில் பங்கேற்றனர்.
டெல்லியில் இருந்து வந்திருந்த அவிஸ்கார் நிறுவனத்தின் ரோபோடிக் தொழில்நுட்ப வல்லுநர்கள் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
ஜூனியர் பிரிவு, நடுப்பிரிவு மற்றும் சீனியர் பிரிவு என மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றிபெறும் அணி டெல்லியில் நடைபெறும் தெற்காசிய அளவினான போட்டியிலும், அப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஜெர்மனியில் நடைபெறும் உலகளாவிய ரோபோடிக் போட்டியிலும் பங்கேற்கும்.
திருச்சியைச் சேர்ந்த புரோபெல்லர் டெக்னாஜி என்ற ரோபோடிக் நிறுவனம் போட்டியை தொகுத்து வழங்கியது. இந்நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஜேஃப் (Zafe) என்னும் மனித வடிவிலான ரோபோட் வருகை தந்த பார்வையாளர்களையும் போட்டியில் பங்கேற்க வந்த மாணவ மாணவியர்களையும் வரவேற்று கலந்துரையாடியது அனைவரையும் வியக்கச் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT