Published : 29 Oct 2019 10:02 AM
Last Updated : 29 Oct 2019 10:02 AM
பாரீஸ்
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரில்ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி கிதியோன், கெவின் சஞ்ஜெயா சுகமுல்ஜோ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் இந்திய ஜோடி ஜோடி 18-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்ஜெயா ஜோடிக்கு எதிராக சாட்விக்-ஷிராக் ஜோடி வீழ்வது இது 7-வது முறையாகும். இதுவரை இந்தோனேஷிய ஜோடியை சாட்விக்-ஷிராக் இணை வென்றதில்லை என்ற சோகம் தொடர்கிறது.
எனினும் 750 புள்ளிகள் கொண்டதொடர் ஒன்றில் சுமார் 36 வருடங்களுக்குப் பிறகு இறுதி சுற்றில் கால்பதித்த இந்திய ஆடவர் ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர் சாட்விக்-ஷிராக். கடைசியாக 1983-ம் ஆண்டு பார்த்தோ கங்குலி, விக்ரம் சிங் பிஷ்ட் ஜோடி இறுதி சுற்றில் கால் பதித்திருந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5-ம் நிலை வீரரான சீனாவின் சென் லாங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் அவர் 21-19, 21-12 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 2-வ வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சென் லாங். கடைசியாக 1983-84-ம் ஆண்டு இந்தியாவின் விமல்குமார் தொடர்ச்சியாக இரு முறை கோப்பையை கைப்பற்றியிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் கொரியாவைச் சேர்ந்த 17 வயதான அன் செ யங் 16-21, 21-18, 21-5 என்ற செட் கணக்கில் 3 முறை உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்த ஆட்டம் 69 நிமிடங்கள் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT