Published : 15 Oct 2019 11:11 AM
Last Updated : 15 Oct 2019 11:11 AM

பயிர் தாளடிகளை எரிக்க வேண்டாம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வேண்டுகோள்

லக்னோ

அறுவடை முடிந்து பயிர் தாளடிகளை விவசாயிகள் எரிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். பஞ்சாய், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்கு பின் பயிர் தாளடிகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், லக்னோவில் இந்திரா காந்தி பிரதிஷ்டான் சார்பில், ‘சுத்தமான காற்று’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

வைக்கோல் போன்ற பயிர் தாளடிகளை விவசாயிகள் எரிக்கும்போது, பல உயிரினங்களுக்கு உணவு கிடைக்காமல் போய் விடுகிறது. மேலும், நிலத்தில் வாழும் நல்ல பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை தீ அழித்து விடுகிறது. விவசாய கழிவுகள் எல்லாமே இப்போது இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. தாளடிகளை உரமாக்க விவசாயிகள் முயற்சி செய்ய வேண்டும். உ.பி. அரசு கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது.

கும்பமேளா விழாவால் ஏற்பட்ட குப்பைகளை, சுற்றுச்சூழ லுக்கு எந்த தீங்கும் இல்லாமல் உ.பி. அரசு அகற்றி உள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினை தற்போது உலக பிரச்சனையாக மாறியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதுதான் நமது பாரம்பரியமாகும். எனவே பயிர் தாளடிகளை விவசாயிகள் எரிக்க வேண்டாம். இவ்வாறு ஆதித்யநாத் வலியுறுத்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x