Published : 18 Jan 2023 04:03 AM
Last Updated : 18 Jan 2023 04:03 AM

கோவை, உடுமலை, உதகையில் காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலா தலங்களில் மக்கள் திரண்டனர்

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கோவை / உடுமலை / உதகை: காணும் பொங்கலையொட்டி, நேற்று கோவை, உதகை, உடுமலையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

காணும் பொங்கலையொட்டி கோவையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் நேற்று மக்கள் குவிந்தனர். பெரியவர்கள், குழந்தைகள் என நேற்று மட்டும் 3,970 பேர் வருகை புரிந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவையில் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடமாக வஉசி பூங்கா உள்ளது.

ஆனால், பூங்காவை ஒட்டியுள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. மேலும், பூங்காவில் உள்ள குழந்தைகளுக்கான ரயிலும் இயங்கவில்லை. பூங்காவுக்கு உள்ளேயே உள்ள டைனோசர் பூங்காவும் திறக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுதவிர, கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் மக்கள் படகு சவாரி செய்தனர். பலர் குளக்கரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

பஞ்சலிங்க அருவி: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. பொது விடுமுறை, வாராந்திர விடுமுறை நாட்களில் அருவியில் குளிப்பதற்காக அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கானோர் திருமூர்த்திமலையில் கூடினர்.

மும்மூர்த்தி வழிபாடு நடைபெற்றது. அருவி மற்றும் அடிவாரத்தில் உள்ள பாலாற்றில் ஏராளமானோர் குளித்தனர். மலை அடிவாரத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பலமணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் திருமூர்த்தி மலையை வந்தடைந்தனர்.

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் முன்னிலை வகித்தார். போட்டிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

பரதநாட்டியம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் பார்வையிட்டு, பங்கேற்பாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். தோட்டப் பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்கு சாக்கு ஓட்டம், லெமன் அண்டு ஸ்பூன் பந்தயம், மியூசிக்கல் சேர் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியர் (பொ) முகம்மது குதுரதுல்லா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் வெங்கடேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதகை வட்டாட்சியர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x