Published : 31 Dec 2022 06:23 AM
Last Updated : 31 Dec 2022 06:23 AM

பாம்பன், தனுஷ்கோடியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கங்களை பார்க்க விரைவில் அனுமதி

ராமேசுவரம்

பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

பாம்பனில் 1846-ம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டது. இது 1923-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர் மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டன.

பாம்பன் கலங்கரை விளக்கம் 100 அடி உயரமும் 9 நொடிக்கு ஒருமுறை வெளிச்சத்தை உமிழும் சக்திவாய்ந்த 1000 கேண்டில் சக்தியுள்ள விளக்கைக் கொண்டது. இதன் சுழல் விளக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு ஒளி தரக்கூடிய ஆற்றல் பெற்றது.

இந்தக் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தைக் கரையில் இருந்து 14 கடல் மைல் தொலைவு வரையிலும் பார்க்க முடியும். பாம்பன் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து மேற்கே பாம்பன் பாலத்தையும், மண்டபத்தையும், கிழக்கே ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் கெந்தமாதன ராமர் கோயிலையும் பார்க்க முடியும். தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், வடக்கே பாக்ஜலசந்தி கடல் பகுதியையும் பாம்பன் தீவின் இயற்கை அழகையும், குருசடை தீவு, சிங்கள தீவு உள்ளிட்ட குட்டித் தீவுகளையும் பார்த்து ரசிக்க முடியும். புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட 18.2.2020-ல் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன. 14.5.2022-ல் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலி காட்சி மூலம் கலங்கரை விளக்கத்தைத் திறந்து வைத்தார்.

ரூ. 7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடியின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதியாக உச்சியில் பார்வையாளர் மாடமும், கலங்கரை விளக்க வளாகத்தில் குழந்தைகளுக்கான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 65 கலங்கரை விளக்கங் களிலும், சுற்றுலா திட்டத்துக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து துறைமுகங்கள் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதுமுள்ள கலங்கரை விளக்கங்களில் அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கூத்தங்குழி, மணப்பாடு, கீழக்கரை, தனுஷ்கோடி, பாம்பன், மல்லிப்பட்டினம், கோடியக்கரை, நாகப்பட்டினம், பூம்புகார், பழவேற்காடு ஆகிய கலங்கரை விளக்கங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும், என்றார்.

கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தைப் பார்வையிடுவதற்கு 2021-ம் ஆண்டிலிருந்தே பார்வை யாளர்கள் அனுமதிப்படுகின்றனர். ஒருவருக்கு ரூ.10 கட்டணமாகவும் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x