யானைகள் நடமாட்டம் எதிரொலி: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

பேரிஜம் ஏரிக்குச் செல்லும்  சாலையில்  வனத்துறை அறிவிப்பு பலகை, மரத்தாலான தடுப்பு வேலிகளை யானைகள் சேதப்படுத்தின
பேரிஜம் ஏரிக்குச் செல்லும் சாலையில் வனத்துறை அறிவிப்பு பலகை, மரத்தாலான தடுப்பு வேலிகளை யானைகள் சேதப்படுத்தின
Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்லும் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மீண்டும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடமான பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ன்ட், அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மோயர் சதுக்கத்திலிருந்து பேரிஜம் ஏரி செல்லும் சாலையில் தர்கா அருகே யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.

அங்கிருந்த வனத்துறை அறிவிப்பு பலகை, மரத்தாலான தடுப்பு வேலிகளை யானைகள் சேதப்படுத்தின. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் பேரிஜம் செல்வதற்கு மறு அறிவிப்பு வரை வனத்துறை தடை விதித்துள்ளது.

காட்டுத்தீ காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு மே 29-ம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி செல்ல அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யானைகள் நடமாட்டத்தால் இரண்டே நாளில் மீண்டும் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானைகள் இடம் பெயர்ந்து வனப்பகுதிக்குள் சென்றதும் பேரிஜம் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in