Last Updated : 14 Apr, 2024 09:00 AM

1  

Published : 14 Apr 2024 09:00 AM
Last Updated : 14 Apr 2024 09:00 AM

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தலையூத்து அருவி.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது. பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ. தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோயிலை அடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோயிலின் முன்பகுதியில் அருவியை காணலாம்.

ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது சிறப்பு. மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும் தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்கின்றனர். பின் மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ. தொலைவுக்கு நங்காஞ்சி ஆறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அருவி பகுதியில் நீர் சுழல், சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு காரணமாக யாரையும் குளிக்க அனுமதிப்பது இல்லை. இருப்பினும் உள்ளூர் வாசிகளும், அருவி பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்வோரும் அவ்வப்போது ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாள்தோறும் ஏராளமானோர் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். அதனை நிறைவேற்றும் வகையில் 2023 ஜூன் மாதம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலங்களாக்க ரூ.8.22 கோடி நிதியை அரசு ஒதுக்கியது. மேலும் 3 ஆண்டுகளில் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டது. இருப்பினும் இத்திட்டம் அறிவிப்போடு நிற்கிறது. எப்போது சுற்றுலா தலமாக்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x