Published : 25 Oct 2023 04:06 AM
Last Updated : 25 Oct 2023 04:06 AM

உதகை தாவரவியல் பூங்காவை 4 நாட்களில் 65,000 பேர் கண்டுகளிப்பு

நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியை கடக்க அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

உதகை: தொடர் விடுமுறையையொட்டி கடந்த நான்கு நாட்களில் சுமார் 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான கால நிலை, இயற்கை வளம் மிகுந்த வனப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் முதலாவது சீசனும்,

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறை பனி சீசனும் களைகட்டும். நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் பிற துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்படும்.

கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து சென்றனர். கடந்த மாதம் இரண்டாவது சீசன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர். தற்போது, உதகையில் பகலில் வெயில், இரவில் நீர்ப்பனி என இதமான காலநிலை நிலவுவதால், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

இதனால் நேற்று லவ் டேல் சந்திப்பு முதல் உதகை மத்திய பேருந்து நிலையம் வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீஸார் சரி செய்தனர். உதகை தாவரவியல் பூங்காவுக்கு சனிக் கிழமை சுமார் 10,539 பேர் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை 16,982-ஆக அதிகரித்து காணப்பட்டது.

திங்கள் கிழமை 20,957, செவ்வாய்க் கிழமை 15,683 பேர் என, கடந்த நான்கு நாட்களில் சுமார் 65 ஆயிரம் பேர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியை ரசித்து சென்றதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து நேற்று மாலை சுற்றுலா பயணிகள் ஊர் திரும்பியதால், நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லாவில் இருந்து கர்நாடகாவுக்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x