Published : 28 Sep 2023 04:04 AM
Last Updated : 28 Sep 2023 04:04 AM

வனத்துறை ரூ.10 கட்டணம் வசூலித்தும் கொடைக்கானல் பைன் மரக்காட்டில் குடிநீர், கழிப்பறை இல்லை!

கொடைக்கானல் பைன் மரக்காட்டுக்குள் நடந்து வர சிரமப்படும் மாற்றுத் திறனாளி

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தலமான பைன் மரக் காட்டில் குடிநீர், கழிப்பறை வசதியின்றி சுற்றுலா பயணிகள் சிரமப் படுகின்றனர்.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை ஆகிய சுற்றுலா இடங் களில் நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கின்றனர். பைன் மரக்காடுகளை சுற்றிப் பார்க்க கட்டணம் வசூலிக்கவில்லை. இப் பகுதியில் ஏராளமான திரைப்பட பாடல்கள், சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த காட்டின் அழகை ரசிக்கவும், படம் எடுத்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் தவறுவ தில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பைன் மரக்காடுகளை சுற்றிப் பார்க்க வனத்துறை சார்பில் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படு கிறது. அதேசமயம், குடிநீர் வசதியின்றி கடைகளில் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டி உள்ளது.

மேலும் இயற்கை உபாதையை தணிக்க கழிப்பறை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். ஆண்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, சுற்றுலாப் பய ணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இன்று (செப்.28) முதல் பள்ளி களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்.

ஆகவே, பைன் மரக்காட்டில் அத்தியாவசிய குடிநீர், கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பைன் மரக்காடு பகுதிக்கு சென்று வரும் வகையில் சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மற்ற சுற்றுலா இடங்களை போல், பைன் மரக்காட்டிலும் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x