

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் கோம்பைக்காட்டில் வரதமாநதி அணை என்பதற்கு பதிலாக, பொருந்தலாறு அணையின் எழில்மிகு தோற்றம் என வைக்கப்பட்டுள்ள தவறான அறிவிப்பு பலகையால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
பழநி வழியாக கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மலைச்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருகிலுள்ள ஊர்கள், தொலைவு, சாலை பாதுகாப்பு குறித்து அறிவிப்பு பலகைள் வைக்கப்பட்டுள்ளன. பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் 2-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பார்த்தால் மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை தெரியும். இதேபோல், சவரிக்காடு அடுத்துள்ள கோம்பைக்காடு பகுதியில் இருந்து பார்த்தால் வரதமாநதி அணை தெரியும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கோம்பைக்காட்டில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் வரதமாநதி அணை என்பதற்கு பதிலாக, பொருந்தலாறு அணையின் எழில்மிகு தோற்றம் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைகின்றனர். இதனை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.