Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
2022-ம் ஆண்டு புதுவை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து மே 1-ம் தேதி மற்றும் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்டுள்ளன. இதில் மே 1 விடுமுறையை சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறைக்கு ஏஐயூடியூசி தொழிற்சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆண்டுதோறும் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை புதுவை அரசு வெளியிடும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
அரசு சார்புச் செயலர் கிரண் இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், “புதுச்சேரியில் மே 1, அக்டோபர் 2 ஆகிய இருநாட்கள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து அந்த நாட்கள் விடுவிக்கப்பட்டுஉள்ளன. துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி இவ்வுத்தரவு வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி சரி செய்யக் கோரி மத்திய உள்துறைச் செயலர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு புதுவை ஏஐயூடியூசி செயலாளர் சிவக்குமார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் கடைப்பிடிக்கும் நிகழ்வு இது.
இந்நிலையில் புதுவை அரசு 2022-ம் ஆண்டு விடுமுறை தின பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அன்று விடுமுறை அளிக்கவில்லை. புதுவை அரசின் இச்செயலை தொழிற்சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த ஆண்டுகளைப் போல 2022-ம் ஆண்டிலும் மே 1-ம் தேதி தொழிலாளர் தின விடுமுறை அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக உள்துறை செயலர், ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று குறிப்பிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சியும் மே 1-ம் தேதி தொழிலாளர் தின விடுமுறையை அறிவிக்க வலியுறுத்தியுள்ளது.
அதிகாரிகள் விளக்கம்
இதுபற்றி அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: அரசு விடுமுறை நாட்களை அதிகளவாக 16-தான் அறிவிக்க முடியும். அதன்படி 2022-ம்ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது மே 1-ல் வரும் தொழிலாளர் தினம், அக்டோபர் 2-ல் வரும் காந்தி ஜெயந்தி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
அதேநேரத்தில், உணர்வுபூர்வமானது என்பதால் மதம் சார்ந்த பண்டிகைகளான பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தாலும் அரசு விடுமுறை பட்டியலில் இணைத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் சில விடுமுறைகள் ஞாயிறன்று வந்தாலும் இதேபோல் நடவடிக்கை எடுப்பது வழக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT