Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
தமிழகத்தில் நல்லாட்சி மலரக் கூடாது என்று சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக சிறுபான்மையினர் அணிச் செயலாளர் டாக்டர் மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்தாள இங்கே சூழ்ச்சி நடக்கிறது. தமிழர்களாக ஒன்றுபட யாருடைய இறை நம்பிக்கையும் தடையாக இங்கே இல்லை.
ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தமிழர்கள். தமிழகத்தில் எந்தக் கோயிலும் சேதப்படுத்தப்படவில்லை. ஆனால், பக்தியை சிலர் வியாபாரப் பொருளாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதனை திமுக எதிர்க்கிறது. பாஜகவும், அதிமுகவும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரானவர்கள். குடியுரிமைச் சட்டத்தையும், வேளாண் சட்டத்தையும் முதல்வர் பழனிசாமி ஆதரித்தார். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மையினர் போராடியபோது திமுக துணை நின்றது.
அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி மலர்வது உறுதி. ஆனால், அந்த நல்லாட்சி மலரக் கூடாது என்று சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். அதனை முறியடித்து வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், “திமுகவுக்கும், முஸ்லிம்களுக்கும் எப்போதும் அன்பு, பாசம் கொண்ட உறவு இருக்கிறது. வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார். இது உறுதி. திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்குமாறு உளவுத் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். மு.க.ஸ்டாலின் தாராள மனதுடன் எங்களுக்கு அதிகத் தொகுதிகள் தருவார்” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT